ஹெல்மெட் போடாததற்காக துரத்தி சென்று வாகனத்தை உதைத்த காவல் ஆய்வாளர்!... டார்கெட் தான் காரணமா?
ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக வாகனத்தை துரத்தி சென்று உதைத்து கீழே தள்ளிய காவல்துறையின் செயலால் 2 உயிர்கள் பரிதாபமாக பறிபோயுள்ளது.
Recommended Video

சென்னை: ஹெல்மெட் போடாமல் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை துரத்தி சென்று வாகனத்தை உதைத்து கீழே தள்ளிய காவல் ஆய்வாளரால் இரண்டு உயிர்கள் பரிதாகமாக பறிபோயுள்ளது. காவல்துறையின் இந்த செயல் தமிழகத்தையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகமே பெண்கள் தினம் கொண்டாடிவரும் நிலையில், தமிழகத்தில் பெண்கள் தினம் காவல்துறைக்கு எதிரான தினமாக மாறியுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா-உஷா தம்பதியினரின் வாகனத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில் கீழே விழுந்த கர்ப்பிணி மீது வேன் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். காவல் ஆய்வாளரின் அராஜகப்போக்கை கண்டித்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தியதில், திருச்சி- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் தன்னெழுச்சியாக கூடியதுபோல், திருச்சியில் நேற்று மக்கள் கூடினார்கள். காவல்துறைக்கு எதிரான போராட்டம் நடத்தினார்கள். திருச்சி-தஞ்சாவூர் சாலையே போர்க்களம் போல் காட்சியளித்தது.

திரண்டு வந்த மக்கள்
தடியடி நடத்தி பொதுமக்களை போலீசார் கலைக்க முயற்சி செய்தனர். ஆனால், அலை அலையாய் திரண்டு வந்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் களத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டபின்பு போராட்டம் ஓய்ந்தது.

விபத்துக்குக் காரணம் என்ன?
காவல் ஆய்வாளரின் அராஜகத்தால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து போயுள்ளது. இதில் கொடுமையென்னவென்றால், ஹெல்மெட் அணியாமல் சென்றதால், ஆய்வாளார் காமராஜ் அவர்களை பல மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களது வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். காவல் ஆய்வாளரின் செயல்தான் விபத்துக்கு காரணம்.

டார்கெட் காரணமா?
மக்கள் போராட்டத்தையடுத்து, ஆய்வாளர் காமராஜை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஆனால், இவர் மட்டும் குற்றவாளியில்லை. இதன் பின்னணி குறித்து காவல்துறையில் விசாரித்தபோது, ஒவ்வோரு மாதமும் இத்தனை வழக்குகள் பதிவு செய்யவேண்டும் என்ற டார்கெட்டை உயரதிகாரிகள் விதித்துள்ளார்கள். இதனால் தான் காமராஜ் போன்ற ஆய்வாளர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

பதில் இல்லை
தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்க போலீசாருக்கு சட்டம் அதிகாரம் கொடுத்துள்ளது. தடுத்தாலும் தப்பிச்செல்லும் நபர்களின் வாகன எண்ணை குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் அதிகாரம் கொடுத்துள்ளது. ஆனால், விரட்டிச்சென்று உதைக்க ஆய்வாளாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இதற்கு எந்த காவல்துறை அதிகாரிகளும் பதில் அளிக்க தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications