அவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது: அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், " சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன்.
கடந்த ஏப்ரல் 1 ம் தேதி, திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக என் மீது திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் யாரையும் அவதூறாக பேசவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்தை வலியுறுத்தித்தான் பேசினேன். இதனால், வைகோவையும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
தேமுதிகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவிற்கு நேற்று பதில் மனு தாக்கல் செய்த அரசு வழக்கறிஞர், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும், தப்பிக்க முயல்வார் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை இன்று நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.