நான் உங்கள் ஊர் மருமகள்... மதுரையில் பிரேமலதாவின் சென்டிமெண்ட் பிரச்சாரம்
மதுரை : மதுரைக்காரங்க ரொம்ப பாசக்காரங்க என்று தெரிந்துதான் என்னவோ அண்ணியார் பிரேமலதாவின் பிரச்சாரமும் சென்டிமெண்ட் ஆகவே அமைந்தது.
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற தினமான நேற்று மதுரை வடக்கு தொகுதி தேமுதிக வேட்பாளார் முஜுபுர் ரகுமானை ஆதரித்து புதூர் பேருந்து நிலையத்தில் நேற்று பிரசாரம் செய்தார்
அப்போது பேசிய அவர், இன்று மீனாட்சி திருக்கல்யாணம். இந்த நன்நாளில் உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினார். என்னை பெண் பார்க்க விஜயகாந்த் வந்தபோது அவர் மீனாட்சி திருவிளையாடல் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
திருமணத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் கூட அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதாவின் முகத்தை எடுத்துவிட்டு எனது முகத்தை வைத்து பலர் திருமண வாழ்த்து சொல்லி இருந்தனர் என்று பழைய நினைவுகளை பேசினார் பிரேமலதா.
மதுரையின் மருமகள்
எனது கணவர் விஜயகாந்துக்கு அந்த படம் ஒப்பந்தமானபின்தான் திருமண யோகம் வந்தது என்று எனது மாமியார் அடிக்கடி கூறுவார். அது இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது என்று கூறிய பிரேமலதா, நான் வேறு யாரோ அல்ல. மதுரையின் மருமகள் என்ற உரிமையோடு உங்களிடம் ஓட்டுக்கேட்க வந்துள்ளேன் என்று சென்டிமெண்ட் ஆக பேசி கை தட்டல் வாங்கினார்.
மதுரை மல்லிகைதான் பிடிக்கும்
சென்னையில் வசித்தாலும் நான் மதுரையின் கலாச்சாரத்தைதான் 25 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். மீனாட்சி திருக்கல்யாணத்தன்று புது மஞ்சள் கயிறு கொண்டு தாலியை மாற்றிக்கொள்வேன். மேலும் நான் மதுரை மல்லிகையைதான் எப்போதும் விரும்பி தலையில் வைத்துக்கொள்வேன் என்று கூறி வாக்காளர்களை வசப்படுத்தினார் பிரேமலதா
செல்லூர் ராஜூ மீது தாக்கு
மதுரை மலரும் நினைவுகள் பேச்சுக்களுக்கு இடையே கொஞ்சம் அரசியலும் பேசிய பிரேமலதா, செல்லூர் ராஜூ செல்லாக்காசு ராஜூ. 5வருடமா என்ன செய்தார் என்று தெரியவில்லை . அவர் பெயரில் மட்டும் செல்லூரை சேர்த்துகொள்ள ஆசைப்படுகிறார் அதனால் தான் அவர் தற்போது தொகுதிகளுக்கு செல்லும் போது குடத்தை வைத்து அடிவாங்குகிறார்.
தவசி வார்த்தை மாறாது
விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைந்தால் ரமணா பாணியில் ஊழலை தடுத்து புரட்சி செய்யப்படும். தமிழ்நாட்டில் இருந்து ரவுடிக்கட்சிகள் அகற்றப்படும். இதனை கருப்பு எம்.ஜி.ஆர் கண்டிப்பாக செய்துமுடிப்பார். துளசி வாசம் மாறினாலும் மாறும். ஆனால் இந்த தவசி வார்த்தை மாறமாட்டார் என்று பஞ்ச் வைத்து முடித்தார் பிரேமலதா.