நான் எங்க போனாலும் என்னை ஸ்டாலின் "பாலோ" பண்ணுகிறார்... பிரேமலதா
சேலம்: கடந்த சில நாட்களாக நான் எங்கு சென்றாலும் ஸ்டாலின் என்னை தொடர்ந்து பின்னாடியே வருகிறார். நாங்கள் கூறும் கருத்துகளுக்கு மாற்று கருத்துகளை கூறி வருகிறார் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் சேலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் திமுக தலைவர் கருணாநிதியை தாக்கிப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறுகையில்,
முதல் அணி
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணி கிடையாது. மாறாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் அணி ஆகும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரணி தெரியவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். நாங்கள் திமுக கூட்டணிக்கு செல்லாததால் அவரது கண்ணுக்கு தெரியவில்லை.
விஜயகாந்த்
பழம் நழுவி பாலில் விழும் என்றபோது கருணாநிதிக்கு விஜயகாந்தின் பலம் தெரியவில்லையா? நீங்கள் வயதில் பெரியவர். அதனால் நான் பதில் சொல்ல மாட்டேன். மே 19ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் போது உங்களுக்கு விஜயகாந்தின் பலம் மிக பிரைட்டாக தெரியும்.
செய்வோம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை லஞ்சம் இல்லா மாநிலம் ஆக்குவோம். 34 அரசுத் துறைகளில் ஊழல் தடுப்பு பிரிவு கொண்டு வரப்படும். பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். நதிகளை இணைப்போம். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றி டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையை உருவாக்குவோம்.
வளர்ச்சி
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை வரும் 5 ஆண்டுகளில் ஏற்படுத்துவார் விஜயகாந்த். ஜெயலலிதா தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். கடந்த சில நாட்களாக நான் எங்கு சென்றாலும் ஸ்டாலின் என்னை தொடர்ந்து பின்னாடியே வருகிறார். நாங்கள் கூறும் கருத்துகளுக்கு மாற்று கருத்துகளை கூறி வருகிறார். ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட்டுவிட்டு நேர்மையான அரசியலை அளிக்க வேண்டும்.