நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் களைகட்டும் கிருஷ்ணஜெயந்தி விழா!
நெல்லை: நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. பல விதங்களில் ஆயிரக்கணக்கான வண்ண பானைகள் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை அருகன்குளத்தில் எட்டெழுத்து பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுடன் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் கோசாலை அமைந்து்ள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இக்கோசாலையின் மையப்பகுதியில் கிருஷ்ணர் பசுக்களுடன் நிற்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் வழிபாடு நடக்கும். பசுக்களுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
இக்கோசாலையில் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். வரும் 5-ந் தேதி கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. துவாரகையில் கிருஷ்ணர் பசுக்களுடன் நிற்பது போலவும், வெண்ணெய், தயிர் பானையை உடைத்து விளையாடுவது போலவும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
கிருஷ்ணஜெயந்தியில் இடம் பெறும் முக்கிய இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்து பல வண்ணங்களில் தயாரான 7 ஆயிரம் கலைநயம் மிக்க பானைகளில வைத்து பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல விதங்களில் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர்களும், இனிப்பு தயாரிக்கும் பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.