என்ன ரவுடித்தனம் இது.. படிக்கிற பிள்ளைங்க கையில் பட்டாக் கத்தியா.. பதை பதைத்த சென்னை!
கல்லூரிக்கு மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் சென்றுள்ளனர்.
Recommended Video

சென்னை: இந்த வயசிலேயேவா ரவுடித்தனம்? படிக்கிற பிள்ளைங்க கிட்ட பட்டாக்கத்தி எதுக்கு? சென்னையை கல்லூரி மாணவர்கள் மீண்டும் அதிர வைத்துள்ளனர்.
ரயிலில் ஃபுட்போர்ட்டில் கத்தியுடன் போகிறவர்கள் சும்மா போகிறார்களா? அதுவும் இல்லை... கெத்து காட்டுகிறேன்னு சொல்லி பிளாட்பாரங்களை தேய்த்து சத்தம் போட்டு, அதன்மூலம் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.

மீண்டும் பட்டாக்கத்தி
சில நாட்களுக்கு முன்பு ஆவடி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் பட்டாக்கத்தியுடன் 100 பேருக்கு மேல் கைதாகி அசிங்கப்பட்டாங்க. இப்ப திரும்பவும் இந்த பட்டாக்கத்தி கலாச்சாரத்தை கையில் எடுத்து அதிர வைத்துள்ளனர். என்ன ஒரு வித்தியாசம்... இப்ப ட்ரெயின் கிடையாது...பஸ்!

சாலையில் உரசினர்
இன்று காலை 5 பேர் கொண்ட மாணவர்கள் 57F பஸ்ஸில் கல்லூரி செல்ல ஏறியுள்ளனர். இவர்கள் எல்லோருமே மாநில கல்லூரி மாணவர்கள். எல்லார் கையிலும் பட்டாக்கத்தி. பஸ்ஸில் ஏறி இடம் இருந்தாலும் உட்கார மாட்டாங்களே. படிக்கட்டில் தொங்கினால்தான் தாங்கள் ஒரு மாஸ் ஹீரோ என்று ஒரு நினைப்பு. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு கத்தியை சாலையில் உரசியபடி வந்துள்ளனர்.

அச்சுறுத்திய மாணவர்கள்
இந்த சத்தத்தை சாலையில் சென்ற மக்கள் திரும்பி பார்க்கும்போது, மாணவர்கள் கையில் பட்டாக்கத்திகள். இப்படி கத்தியை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டே வந்துள்ளனர். சாலையில் போகிறவர்களே நடுங்கி போய்விட்டார்கள் என்றால் பஸ்சுக்குள் உட்கார்ந்திருப்பவர்களின் நிலை எப்படி இருந்ததோ தெரியவில்லை.

பட்டாக்கத்திகள் பறிமுதல்
கொஞ்ச நேரத்தில் இறங்கும் இடம் வந்துவிட்டது. எல்லாரும் இறங்கி கத்தியுடனே காலேஜுக்குள் சென்றனர். ஆனால் மாணவர்கள் இப்படி சேட்டை செய்து மக்களை பீதியடைய செய்த விவகாரம் போலீசுக்கு எட்டிவிட்டது. இதையடுத்து கல்லூரிக்கே போலீஸ் நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களை பிடித்துவிட்டது. அவர்களிடமிருந்து பட்டாக்கத்திகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

எதிர்கால சமுதாயம்?
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பதை ஆண்டாண்டு காலமாக நேரில் பார்த்து அனுபவித்து வருகிறோம். ஆனால் இந்த மாணவர்கள் படிக்கிற வயதிலேயே... அதுவும் காலேஜூக்குள்ளேயே கத்தியை தூக்கி கொண்டு போனால் எதிர்கால சமுதாயம் கடைசியில் எங்கே போயி நிக்க போகிறதோ தெரியவில்லை












Click it and Unblock the Notifications