பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் பாதிரியாருக்கு ஜாமீன்
நெல்லை: நெல்லையில் பள்ளி மாணவியை பலாத்காரப்படுத்தி கர்ப்பமாக்கிய வழக்கில் பாதிரியாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
நெல்லை பேட்டையில் புனித அந்தோணியர் ஆலயம் உள்ளது. இங்கு பங்குத் தந்தையாக இருப்பவர் செல்வன். இவர் ஆலய வாளகத்தில் உள்ள பங்களாவில் தங்கி இருந்தார்.
நெல்லை, பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஆலயத்துக்கு சென்று வந்தபோது பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் மாணவியை பாதிரியார் தனது பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே பாதிரியாரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்ததாக டாக்டர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கருக்கலைப்பு செய்து புதைக்கப்பட்ட சிசுவின் உடலையும் தோண்டி பரிசோதனை செய்தனர். இந்த நிலையில் பாதிரியார் செல்வன் தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சம்பவம் நடந்து 15 நாள் ஆகிவிட்டதால் பாதிரியார் ஜாமீன் கேட்டு நெல்லை மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பொறுப்பு நந்தகுமார், தினமும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.