தமிழிசையை நக்கல் செய்வதா.. உண்ணாவிரதத்தில் குதித்த மாரியம்மன் கோவில் பூசாரி.. கைது!
தமிழிசைக்கு ஆதரவு தெரிவித்து பூசாரி போராட்டத்தில் இறங்கினார்.
சேலம்: தமிழக பாஜக தலைவர் தமிழிசையை சமூகவலைதளங்களில் கேலி கிண்டல் செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று சேலத்தில் உண்ணாவிரதம் இருந்த பூசாரி கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் உள்ளது சாமிநாதபுரம் என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். பூசாரிக்கு வயது 33.

திடீர் உண்ணாவிரதம்
இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நாட்டாண்மை கழக கட்டடம் முன்பு நேற்று வந்தார். அவரது கழுத்தில் ஒரு பதாகையை தொங்க விட்டுக் கொண்டார். பின்னர் திடீரென அங்கேயே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இழிவுபடுத்துகிறார்கள்
கழுத்தில் மாட்டியிருந்த அந்த பதாக அட்டையில், 'டாக்டர் தமிழிசையை, சமூக வலைதளங்களில், இழிவுபடுத்துவோரை கைது செய்ய வேண்டி உண்ணாவிரதம்' எனும் வாசகத்தை இடம் பெற்றிருந்தது. தனி ஒரு ஆளாக உண்ணாவிரதத்தில் பூசாரி ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

நக்கல், நையாண்டி
விரைந்து வந்த போலீசார் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு பூசாரியோ, "ஒரு கட்சி தலைவரான தமிழிசையை பெண் என்றும் பாராமல், நக்கல், நையாண்டி செய்வதை, வன்மையாக கண்டிப்பதாக" கூறினார்.

விடுவித்த போலீசார்
இதையடுத்து போலீசார், அனுமதியின்றி இப்படியெல்லாம் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று தெரிவித்து பூசாரியை கைது செய்தனர். 2 மணி நேரம் அவரிடம் விசாரணை செய்த போலீசார் இறுதியில் எச்சரித்து விடுவித்தனர். தமிழிசைக்கு ஆதரவாக தனி ஒரு மனிதராக போராட்டத்தில் பூசாரி குதித்த செய்தியால் மாவட்ட அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications