சில்லென வீசும் காற்று.. சிலீர் குளிர்... இதமான தட்பவெப்பம்.. கொடைக்கானல் உங்களை அன்புடன் வரவேற்கிறது
கொடைக்கானல்: வெளியில் பார்த்தால் வெளுக்கும் வெயில். தலை அரிக்கிறது, தாகம் வாட்டுகிறது.. பேசாமல் எங்காவது ஓடிப் போய் விடலாமா என்று எண்ணம் எல்லார் மனதையும் தைக்கும் காலம் இது.. அதுதான் கோடை காலம்.. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளு குளு கொடைக்கானலில் சீசன் களை கட்ட ஆரம்பித்து விட்டதாம். மக்கள் கூட்டம் மெல்ல மெல்ல அலை மோத ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் மார்ச் இறுதியில் ஆரம்பித்து ஜூன் வரை முதல் கட்ட சீசன் களைகட்டியிருக்கும்.
தற்போது தமிழகத்தில் கோடை காலம் வாட்ட ஆரம்பித்துள்ள நிலையில் கொடைக்கானலில் சீசன் பிக்கப் ஆகியுள்ளதாம்.

குளு குளு சீசன்...
தரைப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைவெயில் வறுத்து எடுக்கும் வேளையில் கொடைக்கானலில் இதமான குளு குளு சீசன் நிலவும் சமயத்தில் ஏராளமானோர் வருகை தருவதுண்டு.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்...
இந்த சீசனை அனுபவிக்க இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள். இவ்வாறு கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது.

கோடை விழா...
10 நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் மலர் கண்காட்சி, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் சுற்றுலா பயணிகளையும் பங்கேற்க வைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

சாரல் மழை...
தற்போது கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் குளுமையான சீதோசனம் நிலவி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள்...
வார விடுமுறை நாட்களில் மட்டும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவு இருந்து வருகிறது. குளு குளு சீசன் தொடங்கி விட்டதால் இனி அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன நெரிசல் அதிகரிக்கும்...
சீசன் தற்போதுதான் ஆரம்பித்திருப்பதால் பெரிய அளவில் வாகனக் கூட்டம் இன்னும் ஏற்படவில்லை. இருப்பினும் பிளஸ்டூ, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து விட்டால் குடும்பத்துடன் வருவோர் கூட்டம் பெரிய அளவில் அதிகரிக்கும். அந்த சமயத்தில் வாகன நெரிசல் அதிகமாகும் என்பதால் போலீஸார் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications