பிரம்புடன் ஹாஸ்டலில் ரெய்டு விட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்... தேனியில் பரபரப்பு!
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி விடுதிக்கு கையில் பிரம்புடன் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜா முத்தையா ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்புகளுக்குப் போகாமல், ஹாஸ்டல் அறையில் படுத்துத் தூங்கியபடியும், செல்போனில் விளையாடியபடியும், லேப்டாப்பில் படம் பார்த்தபடியும் இருந்த மாணவர்களை அவர் கடுமையாக கண்டித்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தார்.
பள்ளிக் கூட மாணவர்களிடம் கடிந்து கொள்ளும் ஆசிரியர் போல மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராஜா முத்தையாவின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தினசரி வகுப்புக்கு சரியாக வரவில்லை. இதுமட்டுமின்றி பயிற்சி டாக்டர்கள் 60 பேரும் உள்ளனர். இவர்களும் முறையாக வந்து பயிற்சி எடுப்பதில்லை. கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி திரியும் மாணவர்கள் பற்றி கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் ராஜமுத்தையா கல்லூரியில் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று சோதனையிட்டார். அப்போது பெரும்பாலான மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கையில் பிரம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு கல்லூரி அலுவலர்களுடன் விடுதிக்கு சென்றார் அவர். அங்கு பார்த்தபோது அனைத்து மாணவர்களும் தூங்கிக்கொண்டிருந்தனர். சிலர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தும், லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தனர்.
கையில் பிரம்புடன் வந்த முதல்வர் அனைத்து மாணவர்களையும் மிரட்டி ஒழுங்காக வகுப்புக்கு செல்லாவிட்டால் டி.சி.யை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று விடுங்கள். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் எத்தனையோ மாணவர்கள் அலைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் உங்களுக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் வீணடிக்கிறீர்களே என்று எச்சரித்தார்.
கையில் பிரம்புடன் வந்த முதல்வரைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவசரம் அவசரமாக வகுப்புகளுக்கு விரைந்தனர்.












Click it and Unblock the Notifications