பேசிப் பேசியே ராம்குமாரை தற்கொலைக்கு தூண்டிய சக கைதிகள்?
சென்னை: சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை மற்ற கைதிகள் சிலர் தொடர்ந்து பயமுறுத்தும் வகையில் பேசி வந்ததாகவும், அதுவே அவரைத் தற்கொலை செய்ய தூண்டியதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் சுவாதி. இந்த வழக்குத் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். ஒருதலைக் காதல் காரணமாக ராம்குமார் சுவாதியை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். ராம்குமார் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கங்கள் எதுவும் தரப்படாததால், தொடர்ந்து பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றன.
இதனால், அவர் சிறைக்குள் கொலை செய்யப்பட்டு விட்டதாக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஏற்கனவே, கைது சம்பவத்தின் போதும் ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ராம்குமார் தற்கொலை குறித்து அவருக்கு அடிக்கடி கவுன்சிலிங் மூலம் மன அழுதத்தை குறைப்பதற்கான சிகிச்சை அளித்து வந்த மனோதத்துவ நிபுணர் ஒருவர் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், 'ராம்குமாரை பயமுறுத்தும் விதத்தில் சிலர் பேசி இருக்கலாம். சில கைதிகள் கூட அவரை பயமுறுத்தும் வண்ணம் பேசியதாக தகவல் உண்டு. அது போன்ற கைதிகளை ராம்குமாரை சந்திக்க விடாமல் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 'போலீசார் கைது செய்த போதே, ராம்குமார் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றவர். அதே மனநிலை தான் அவரிடம் தொடர்ந்து காணப்பட்டது. அவர் யாரிடமும் மனம்விட்டு பேசமாட்டார். வாரத்துக்கு ஒரு முறை நான் அவரை சந்தித்து மனதளவில் அவரை தேற்றி இருக்கிறேன். என்னிடம் கூட மனம்விட்டு பேச மாட்டார். நான் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார்.
ராம்குமாரின் சாவுக்கு கண்டிப்பாக சிலரின் தூண்டுதல் பின்னணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ராம்குமாரை கொல்வதற்கு எந்தவித காரணமும் இல்லை. சிறையில் அதற்கான முகாந்திரமும் இல்லை. மாஜிஸ்திரேட்டு விசாரணையில் கண்டிப்பாக உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications