கையெழுத்து சரியில்லை எனக் கூறி மாணவியை சேர்க்க மறுத்த தனியார் பள்ளி
கோவை: கையெழுத்து சரியில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளி மாணவியை 9-ம் வகுப்பில் சேர தனியார் பள்ளி அனுமதி மறுத்தது பற்றி கோவை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கோவை காந்திபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் பிரியா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தவர்.
மாற்றுத்திறனாளியான இவர், 9ம் வகுப்பு படிக்க விருப்பம் தெரிவித்த போது, கையெழுத்து சரியில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தாக பிரியா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வேறு பள்ளிகளில் சென்று சேர முயன்ற போதும் அவரை யாரும் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரியா இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்தேன். தற்போது 9-ம் வகுப்பு சேர உள்ள நிலையில் எனது கையெழுத்து சரியில்லை என கூறி வேறு பள்ளிக்கு செல்லுமாறு கூறுகின்றனர். என்னை அதே பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.