காதலித்து ஏமாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரிக்கு எதிராக போராடி வென்ற பிரியதர்சினி
சென்னை: பெரும்பாலும், ஒருகட்டத்துக்கு மேல் போராட தெம்பில்லாமல் ஓய்ந்துபோகும் பெண்களைத்தான் இந்த சமூகம் அதிகம் சந்தித்திருக்கிறது. ஆனால், தன் போர்குணத்தைத் துளியும் மாற்றிக்கொள்ளாமல், தவறிழைத்த அந்த நபருக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலமாக, ஏமாற்ற நினைக்கும் ஆண்கள் அனைவருக்குமே பாடம் புகட்டுவதற்காக, கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் பிரியதர்சினி என்ற இளம்பெண்.
பல் டாக்டரான வருண்குமார், சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி'யில் பயிற்சி பெற்றபோது, உடன் படித்த பிரியதர்சினிக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது.
நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல், இருகுடும்பத்திற்கும் தெரியவரவே சந்தோசமாக ஒத்துக்கொண்டனர். தங்கள் வீட்டு மருமகள் என்றே உறவுகளிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர் வருண்குமாரின் பெற்றோர்கள்.
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வில் பிரியா தேங்கிவிட, இறுதித் தேர்வு வரை சென்ற வருண், இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றுத் தேர்வானார்.
இந்தச் சூழலில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க மண்டபமெல்லாம் பார்த்த நிலையில், திடீர் என்று அத்தனை ஏற்பாடுகளும் தடைபட்டன.
பதவி வந்த உடன் பறந்த காதல்
வருண்குமாருக்கு பதவி வந்த உடன் அவரது பெற்றோரின் குணம் மாறியது. ''என் பையனுக்கு நிறைய பேர் பொண்ணு கொடுக்க காத்திருக்காங்க. 2 கிலோ தங்கம், 50 பவுன் நகை, பி.எம்.டபிள்யூ கார் கொடுத்தாதான் கல்யாணம் என்று கேட்கவே அதிர்ச்சியடைந்தார் பிரியதர்சினி.
நீதி கேட்டு நெடும்பயணம்
எவ்வளவோ கெஞ்சியும், கதறியும், வருணின் பெற்றோர் மனது இளகவில்லை. அதோடு மட்டுமல்லாது காதலுக்கு ஆதாரமான நிறைய சாட்சியங்களையும் வருண் அழிக்கவே பொங்கியெழுந்த பிரியதர்சினி நீதிமன்ற படியேறினார்.
ஏ.எஸ்.பியான வருண்குமார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றும் எந்த பயணும் இல்லை ஐ.பி.எஸ் ஆபீஸர் எனும் அந்தஸ்தையும் பெற்றுவிட்ட, வருண்குமார், தற்போது தமிழக காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவியில் அமர்ந்தார்.
குறையாத போர்குணம்
காவல் நிலையம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று குறையாத போர்க்குணத்துடன் சட்டப் போராட்டம் நடத்திய பிரியதர்சினிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது இன்றைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. வருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்த அச்சுறுத்தல்
ஆனால் இந்த வெற்றி எளிதில் கிட்டிவிடவில்லை பிரியதர்சினிக்கு. எத்தனையோ கொலை மிரட்டல், தற்கொலை செய்து கொள்ள தூண்டியது என பல அச்சுறுத்தல்களை அசராமல் சமாளித்துள்ளார்.
டெல்லி டூ சென்னை
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்படவே 2012ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் கதவுகளை தட்டினார் பிரியதர்சினி. சென்னைக்கும் டெல்லிக்கும் அலைந்ததின் பயனாக வருண்குமாரை கைது செய்யச் சொல்லி கடந்த பிப்ரவரி 14ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமறைவான வருண்
நீதிமன்ற உத்தரவு வந்த உடன் வருண் தலைமறைவானார். ஆனால் வருண் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இதற்கிடையில் சிவகாசியில் அம்பிகா பாண்டே என்கிற வட இந்திய ஐ.பி.எஸ் அதிகாரியை வருண் அவசர திருமணமும் செய்து கொண்டார்.
அப்ப புடிச்சது…
இதை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட வருண், அப்ப அந்த பொண்ணை பிடிச்சது காதலித்தோம், அப்புறம் புடிக்கலை... இப்ப இன்னொரு பொண்ணை பிடிச்சது கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று தன்மீது நியாயப்படுத்தியுள்ளார் வருண்குமார்.
வருண் தண்டிப்படவேண்டும்
போராட்டகளத்தில் எத்தனையோ சோதனைகளை சந்தித்தும் கடைசியில் வெற்றியை எட்டியுள்ளார் பிரியதர்சினி. வருண் தண்டிக்கப்படணும், அதைப் பார்த்த பிறகு... பொண்ணுங்களை ஏமாத்தவோ... வரதட்சணை வாங்கவோ... எந்த ஆணும் துணியக்கூடாது என்று பிரியதர்சினி நம்பிக்கையோடு கூறிய வார்த்தைகள் உண்மையாகிவிட்டது.