துப்பாக்கி உரிமத்திற்கு லஞ்சம்: சிபிசிஐடி விசாரணை- அச்சத்தில் உறைந்துள்ள போலீசார்
நெல்லை: துப்பாக்கி உரிமம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக சிபிசிஐடி விசாரணை நடத்து வருவதால் புதிதாக யார் துப்பாக்கிக்கு உரிமம் கேட்டாலும் போலீசார் பயத்துடன் பார்க்கின்றனர்.
நெல்லை மாநகரில் கடந்த 2012ம் ஆண்டு துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்த 68 பேரில் 48 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டன. இதில் ஓரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் உரிமம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஓற்றை இலக்கத்தில் மட்டுமே துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு மாறாக ஓரே ஆண்டில் பலருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டதால் சந்தேகம் எழுந்தது.
விண்ணப்பித்தவர்களின் குடும்ப பின்னணி, குற்ற பின்னணி, ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்றும் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த உரிமத்திற்காக பல போலீஸ் அதிகாரிகள் ரூ.2 லட்சம் வரை பெற்றதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் 2012ம் ஆண்டு டிசம்பரில் விசாரணையை தொடங்கினர். இரண்டு முறை சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் நெல்லைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால் 2013ம் ஆண்டு உரிமம் கேட்டு விண்ணப்பித்த 9 பேரில் இதுவரை யாருக்கும் உரிமம் கொடுக்கவில்லை போலீசார். 2012ம் ஆண்டு உரிமம் வழங்கியதில் பிரச்சனை ஏற்பட்டதால் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் தற்போது உரிமம் கேட்டு யார் வந்தாலும் சந்தேகம் கொண்டு பார்த்து வருகின்றனர்.
ஒருவேளை சிபிசிஐடி போலீசாரே முறைகேட்டை கையும் களவுமாக பிடிக்க போலியாக துப்பாக்கி உரிமம் கேட்டு வந்துள்ளார்களோ என்று பயத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்து வருபவர்களின் குடும்ப பின்னனி, குற்றபின்னனி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications