ரூ.3.85 கோடி கடனை திருப்பித் தரவில்லை.. சரத்குமார், ராதிகா மீது மோசடி புகார்
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் 3.85 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தயாரிப்பாளர் சீனிவாசன் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பெரும் தொகை ஒன்றை சரத்குமார் வாங்கியதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 7ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வுத்துறை அலுவலகத்தில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த பரபரப்பு சற்று ஓய்ந்த நிலையில், தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பணமோசடி செய்துவிட்டதாக தயாரிப்பாளர் சீனிவாசன் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பாம்பு சட்டை என்ற படத்தை தயாரிக்க, சரத்குமார், ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர், 'மேஜிக் பிரேம்ஸ்' என்ற கம்பெனியில், எங்கள் நிறுவனத்தையும் பங்குதாரராக்க வேண்டும் என்றனர். அதற்காக, 1.50 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இந்த கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை படத்தை 'டிவி' சேனல்களுக்கு விற்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் எங்களுக்கே உரியது என ஒப்பந்தம் போட்டோம்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி சட்டவிரோதமாக படத்தை ரிலீஸ் செய்து விட்டனர். ஆனால் எங்களுக்கு தரவேண்டிய 3.85 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை. எனவே அந்த பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு கேட்டுகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.