புதுப் படங்கள் ரிலீசுக்கு போடப்பட்ட தடை வாபஸ்! - தயாரிப்பாளர் சங்கம்
நாளை முதல் புதிய தமிழ்ப் படங்கள், மொழிமாற்றுப் படங்கள் வெளியாகாது என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
நாளை வெளியாகவிருக்கும் பாயும் புலி படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என ரோகினி பன்னீர் செல்வம் தலைமையிலான செங்கல்பட்டு ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் அறிவித்திருந்தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம், நாளை முதல் புதுப் படங்களை வெளியிட மாட்டோம் என அறிவித்திருந்தது.
ஆனால், நாளை படத்தை வெளியிடவிருந்த யாரும் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. படத்தை வெளியிடாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனக் கூறி, செங்கல்பட்டு தவிர்த்த பிற ஏரியாக்களில் படத்தை வெளியிடலாம் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ் திரையுலகின் அவசர கூட்டம் அக்கார்ட் ஹோட்டலில் நடந்தது. இதில் கலைப்புலி தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில் தமிழ் திரையுலகின் ஒட்டு மொத்த நலன் கருதி புதிய முடிவு அறிவிக்கப்பட்டது.

அதில், "ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் வேண்டுகோளை ஏற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கூடி எடுத்த முடிவின்படி, ஏற்கெனவே திட்டமிட்டபடி 04.09.2015 வெள்ளிக்கிழமை பாயும் புலி திரைப்படம் உள்ளிட்ட அனைத்து நேரடி தமிழ்த் திரைப்படங்களும் வெளியீடு செய்யப்படும்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்து படங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அல்லாமல் வேறு திரைப்படங்களை மனதில் வைத்து பாயும் புலி திரைப்படம் உள்பட அனைத்துத் திரைப்படங்களையும் திரையிடாமல் நஷ்டத்தை ஏற்படுத்தும் திரையரங்குகள் மீது, தமிழ்த் திரையுலகம் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications