மதுரை அன்பு புகார்: கொலை மிரட்டல் வழக்கில் சிவசக்தி பாண்டியன் கைது!
காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, வான்மதி, காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள், கடல் பூக்கள், வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பிலும் இருந்தவர்.
இவர் மீது மதுரையை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் 15.3.2006-ம் ஆண்டு ஒரு புகார் மனு கொடுத்தார். தனக்கும் சிவசக்தி பாண்டியனுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் உள்ளது என்றும் அது தொடர்பாக அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழக திரைப்பட வர்த்தக சங்க முகவரியை மையமாக வைத்து அந்த புகாரை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சிவசக்தி பாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவரைப் பிடிக்க பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆயிரம் விளக்கு போலீசார் சிவசக்தி பாண்டியனை இன்று கைது செய்தனர். பின்னர் எழும்பூர் 14-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் அணியை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றார் சிவசக்தி பாண்டியன். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் அவர் இப்போது கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.