சமூகப் பணி.. அரசியல்.. பேராசியர் பணி… து.மூர்த்தியின் நெடும் பயணம்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 28 ஆண்டு காலம் பேராசிரியராக பணியாற்றி மறைந்த து.மூர்த்தியின் வாழ்க்கை குறிப்புகள்.
சென்னை: தமிழகத்தில் பிறந்த உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டு காலம் பணியாற்றி அந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே உயிரிழந்த பேராசிரியர் து. மூர்த்தி பற்றி குறிப்புகள்.
1952ல் வேலூர் மாவட்டத்தில் பிறந்த மூர்த்தி, அங்குள்ள ஊரிஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து ஊரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்த மூர்த்தி சென்னை மாநில கல்லூரியில் தமிழில் முதுகலைப்பட்டம் படித்தார். பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியை தொடங்கிய மூர்த்தி, போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்து, கடந்த ஆண்டு நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
தமிழியல் புதிய தடங்கள், 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள், பெரியாரும் தமிழ்த்தேசியமும் ஆகிய உள்ளிட்ட சமூக, அரசியல் நூல்களை எழுதியுள்ளார். மேலும், தான் எழுதிய கவிதைகளை தொகுத்து கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பெரியார், அம்பேத்கர், மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி அதற்கேற்ப சமூக பணிகளை ஆற்றி வந்தவர். மார்க்சிய ஆய்வறிஞரான மூர்த்தி, எம்.எல் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு போராளியாக வாழ்ந்தவர். இறுதி வரை மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியிலும் பணியாற்றி வந்தவர்.