4 ஏக்கர் நிலத்திற்காக தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன்
தர்மபுரி: தர்மபுரியில் சொத்து தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் தனது தந்தையை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே இருக்கும் பூமாண்டஅள்ளி ஊராட்சி போலம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள்(50). அவரது மனைவி பாஞ்சாலை(42). அவர்களுக்கு அருள்மணி (24,) இளையராஜா (16) என்ற மகன்கள் உள்ளனர். பெருமாள் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் பழக்கம் உள்ளவர்.

அவர் மது குடிப்பதால் அவரின் தந்தை சின்னசாமி தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தை மருமகள் பாஞ்சாலை பெயரில் கிரையம் செய்தார். பெருமாள் பெயரில் கிரையம் செய்தால் அவர் நிலத்தை விற்று குடித்துவிடுவார் என்று அப்படி செய்தார்.
சொத்து விஷயத்தால் பெருமாள் தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேறு ஒரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பாஞ்சாலை மகன்களுடன் அல்லியூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பாஞ்சாலை போலம்பட்டியில் தனது பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த பெருமாள் தனது 2வது மனைவியின் மகன்களான உமாசங்கர், அஜீத்கண்ணன் ஆகியோருக்கும் சொத்தில் பங்கு அளிக்குமாறு கூறி அருள்மணியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 14ம் தேதி பெருமாள் குடிபோதையில் அருள்மணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருள்மணி உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையை அடித்துக் கொன்று அவரின் உடலை அருகில் இருந்த கிணற்றில் வீசினார்.
பின்னர் பூமாண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் முருகன் முன்பு அருள்மணி சரண் அடைந்தார். இது குறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்மணியை கைது செய்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் வந்து பெருமாளின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications