பீட்டாவுக்கு ஆதரவு- நடிகை திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு... காரைக்குடியில் படப்பிடிப்பு ரத்து!
பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தாகக் கூறி நடிகை திரிஷாவை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். இதனால் காரைக்குடியில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கர்ஜனை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளர் நடிகை திரிஷா என்று கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒன்று கூடி, காரைக்குடியில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டனர்.
சுமார் 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, திரிஷாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திரிஷா மீது தாக்குதல் எதுவும் நடைபெறாத வகையில், படக்குழுவினரும், போலீசாரும் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலும் திரிஷா கேரவேனில் இருந்து வெளியே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி அந்த வாகனத்தையும் போராட்டக்காரர்கள் சிறைபிடித்துள்ளனர்.