விஏஓவுக்கு பாடம் கற்பிக்க.. லஞ்சப் பணத்துடன் கலெக்டரிடம் மனு கொடுத்து போராட்டம்.. கடலூரில் பரபரப்பு
லஞ்சம் வாங்கும் விஏஓவை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனிநபர் அராஜகங்கள், இவற்றையெல்லாம் கண்டித்து எவ்வளவோ போராட்டங்களை நாம் கண்டிருப்போம். குறிப்பாக லஞ்சம் வாங்குவதை கண்டிக்கும் வகையில் எத்தனையோ எதிர்ப்புகளை பொதுமக்கள் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்திருந்தாலும், கடலூர் அருகே உள்ள ஒரு கிராம மக்கள் நூதனமான ஒரு போராட்டத்தை வேதனையோடு நடத்த முயன்றனர்.
கடலூர் அருகே உள்ள கிராமம் நடுவீரப்பட்டு. இங்குள்ள விஏஓ என சொல்லப்படும் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் எந்த காரியத்துக்கும் லஞ்சம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வருபவர்கள், பிறப்பு, இறப்பு, இருப்பிடம், சாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வாங்க வருவார்கள். அவை தவிர பட்டா மாறுதல் செய்வதானாலும் இங்குதான் வரவேண்டும்.

இதனால் எந்த நோக்கத்துக்காக கிராம மக்கள் தன்னை நாடி வந்தாலும், அவர்களிடம் இந்த அதிகாரி லஞ்சம் கேட்டுவிடுவதாக கூறப்படுகிறது. அதிலும் பட்டா, ஓய்வூதிய சான்றிதழ் என்றால் 2000 ரூபாய் வரை லஞ்சம் தர வேண்டும் என அளவு நிர்ணயித்து உள்ளாராம். ஒருவேளை லஞ்சம் தர மறுத்துவிட்டால், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிடுவதாகவும், அத்துடன் சான்றிதழ்களையும் தர மறுத்து விடுவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த நடுவீரப்பட்டு கிராம மக்கள் கிராம நிர்வாகி அதிகாரிக்கு எதிராக ஒன்று திரண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம் என மனுவையும் தயார் செய்து ஆட்சியர் அலுவலகத்துக்கு கிளம்பினர். அதோடு லஞ்சம்... லஞ்சம்... என்று மட்டுமே அதிகாரி செயல்படுவதால், தங்களின் கோரிக்கை மனுவுடன் லஞ்ச பணத்தை இணைத்துக் கொண்டனர். தாங்கள் கையில் வைத்திருந்த ஒவ்வொரு மனுவிலும் ரூ.2000., ரூ.500 என சேர்த்து ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் கிராம நிர்வாக அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.












Click it and Unblock the Notifications