ஆக்கிரமிப்புகளுக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்புக் காட்டுங்கள்.. மக்களுக்கு அமுதா ஐஏஎஸ் அறிவுரை
சென்னை: சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு முக்கியக் காரணமே ஏரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள்தான். இதை மக்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களைச் சுற்றிலும் வரும் ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட, சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அமுதா தலைமையிலான படையினர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கி காணாமல் போன கால்வாய்களை மீட்டு வருகின்றனர்.
இந்த சமயத்திலும் சில அரசியல் திமிங்கலங்கள் அமுதாவின் பணிக்கு இடையூறு செய்யப் பார்த்தனர். ஆனாலும் அதைக் கண்டு கொள்ளாமல் தனது வேலையில் குறியாக இருக்கிறார் அமுதா. இதனால் பல பகுதிகளில் ஆக்கிரமிப்புக்குள்ளான கால்வாய் திரும்ப வந்துள்ளது

அதிரடி அகற்றம்
கிஷ்கிந்தா செல்லும் சாலையில்தான் மிகப் பெரிய அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியுள்ளார் அமுதா. அடையாறுக்குச் செல்லும் நீர் வழிப் பாதைகள், கால்வாய் ஆகியவற்றை ஆக்கிரமித்திருந்த மிகப் பெரிய கட்டடம் முதல் சாதான சிறிய கட்டடம் வரை பாரபட்சம் பார்க்காமல் இடித்துத் தள்ளி வருகிறது அமுதா தலைமையிலான படை.

இடையூறு அரசியல்வாதிகள்
ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசியல் கட்சியினர் அமுதாவை நெருக்கி தங்களது கட்டடங்களைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அமுதா அதை அனுமதிக்கவில்லை. அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

வியாபார நிறுவனங்கள்தான்
பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் வர்த்தக நிறுவனங்கள்தான். அதாவது ஆக்கிரமிப்பாளர்கள் பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். கடைகள் உள்ளிட்டவை இதில் உள்ளன. இவற்றால்தான் பெரும்பாலான பாதிப்புகளை புறநகர் மக்கள் சந்தித்துள்ளனர்.

மக்களுக்கு அறிவுரை
ஆக்கிரமிப்பு குறித்து அமுதா கூறுகையில், எதற்கெல்லாமோ போராடுகிற மக்கள் தங்களுடைய நீர் நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பை அகற்ற ஆரம்ப கட்டத்திலேயே போராட வேண்டும். அப்போதுதான் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பயம் வரும். அரசியல் கட்சியினரை பார்த்து பயப்படக் கூடாது. ஆற்றுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் கால்வாய்களை எல்லாம் அடைத்து விட்டால் தண்ணீர் குடியிருப்புக்குள்தான் வரும். தயவுசெய்து இனியாவது மக்களும் தங்களுடைய நீர் நிலையை பாதுகாக்க முன் வரவேண்டும் என்றார் அமுதா.

மக்கள் மகிழ்ச்சி
அமுதாவின் அதிரடி நடவடிக்கையால் தற்போது அப்பகுதியில் பெருமளவிலான கால்வாய்கள் புத்துயிர் பெற்றுள்ளன. தேங்கிக் கிடந்த வெள்ள நீரும் வேகமாக வடிந்து விட்டது. இதைப் பார்த்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் மீண்டு வந்த கால்வாய்களை மீண்டும் மண் போட்டு மூடி விடாமல் பார்த்துக் கொள்வது மக்களின் கையில்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications