மதுரையில் நினைவேந்தல் நடத்த முயன்ற 81 பேருக்கு சிறை...நீட்டுக்கு எதிராக தொடரும் 7வது நாள் போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி 7-வது நாளாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: அனிதாவுக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்கள் இன்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதாவுக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,000க்கும் அதிகமானோர் போராட்டங்கள் பங்கேற்று கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவை அரசு கலைக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ராமநாதபுரம் சேதபதி அரசு கலைக்கல்லூரிக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைப்பு
மதுரை தள்ளாகுளத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட 81 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 81 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆண்டாள் கோவில் கோபுரத்தில் போராட்டம்
விருதுநகர் அருகே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அனிதாவுக்கு நீதி கோரி முழக்கங்களை எழுப்பிய மாணவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மாணவர்கள் கோபுரத்தில் இருந்து இறங்க மறுத்தனர்.
பள்ளி மாணவர்கள் போராட்டம்
இதேபோல் கொடுங்கையூரில் தனியார் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தினர். ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் நகராட்சி பள்ளி மாணவர்களும் நீட் வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
கல்லூரிகளுக்கு விடுமுறை
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வு வேண்டாம் என்ற முழக்கத்துடனும் கடந்த 3 நாட்களாக ராயப்பேட்டை நியூ காலேஜ் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களை கலைந்து செல்ல நிர்வாகம் கேட்ட போதும் அவர்கள் செல்லாததால், கல்லூரிக்கு நிர்வாகம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சென்னை சட்டக்கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.