சாதுக்கள் மடத்தில் இருந்து நித்யானந்தா சீடர்கள் அதிரடியாக வெளியேற்றம் - தள்ளுமுள்ளு
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் சாதுக்கள் மடத்தில் இருந்து நித்யானந்தா சீடர்களை வெளியேற்றியபோது ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தைச் சேர்ந்தவர் சுவாமி ஆத்மானந்தா. இவர் சேலம், காரைக்குடியில் சாரதா கல்லூரிகளை இலவசமாக நடத்தி வருகிறார். இந்த ஆத்மானந்தாவின் நிர்வாகத்தில் வேதாரண்யம் கந்தசாமி சாதுக்கள் மடம், அருணாசல சுவாமி மடம், திருவாரூர் சோமநாதர் கோயில் ஆகியவை இருக்கின்றன. இந்த மடங்கள் மற்றும் கோவிலுக்குப் பொறுப்பானவராக ஞானேஸ்வரனாந்தாவை ஆத்மானந்தா நியமித்திருக்கிறார்.

கல்லூரிகளை நடத்திய வகையில் கடன் ஏற்பட்டு அதில் இருந்து மீள்வதற்காக தம்மிடம் உதவி பெற்று வளர்ந்த நித்யானந்தாவிடம் கடன் கேட்க ஆத்மானந்தா முடிவு செய்திருக்கிறார். நித்யானந்தாவும் ரூ2.15 கோடி கடன் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால் இந்த கடனுக்கு பதிலாக ஆத்மானந்தாவின் கட்டுப்பாட்டில் உள்ள வேதாரண்யம் மடங்கள், திருவாரூர் கோவில் ஆகியவற்றுக்கு தம்மை மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் நித்யானந்தா நிபந்தனை விதித்திருக்கிறார்.
இதை முதலில் ஆத்மானந்தாவும் ஏற்றுக் கொண்டு பத்திர பதிவுக்குப் போயிருக்கிறார்.. ஆனால் அப்படியெல்லாம் நித்யானந்தாவை மடாதிபதியாக்கிட சட்டத்தில் இடம் இல்லை என்பதால் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து ஒருவழியாக ரூ2.15 கோடி கடனை திருப்பிக் கொடுக்க ஆத்மானந்தா ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நித்யானந்தா தரப்பு எப்படியும் மடங்களை அபகரித்து விடுவது என்ற நோக்கத்துடன் அவ்வப்போது இந்த மடங்களுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் வேலையை செய்து வந்தது.
இந்நிலையில் நித்யானந்தாவின் 4 சீடர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்று வேதாரண்யம் மடத்தில் தங்கி வந்தனர். இதனிடையே, சாதுக்கள் மடத்தில் நித்யானந்த சீடர்கள் தங்குவதற்கு, கடந்த 16 ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளார் ஞானேஸ்வரானந்தா.. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆணை பெற்று 2 வாரங்கள் ஆகியும், நித்யானந்தாவின் சீடர்கள் வெளியேறாததால், ஞானேஸ்வரானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று நித்யானந்தா சீடர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வெளியேற்றினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது. சம்பவ இடத்திற்குச் வந்த வட்டாட்சியர் குமார், நீதிமன்ற ஆணையை செயல்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து நித்யானந்தா சீடர்கள் 4 பேர் மடத்தை விட்டு வெளியேறினர்.












Click it and Unblock the Notifications