பெரியாரை இழிவுபடுத்தும் சீமானுக்கு கடும் எச்சரிக்கை - கடலூரில் கோவை ராமகிருஷ்ணன் அமைப்பு போராட்டம்!
சென்னை: தந்தை பெரியாரை தொடர்ச்சியாக இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடலூரில் கண்டனப் போராட்டம் நடத்தினர். மேலும் இக்கூட்டத்தில் பேசிய த.பெ.தி.க நிர்வாகிகள், தந்தை பெரியாரையும் திராவிடர் இயக்க சித்தாந்தத்தையும் இனியும் சீமான் இழிவாகப் பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆட்சி தாமே அமைக்கப் போவதாக நம்பிக்கையுடன் சீமான் பேசிவருகிறார்.

ஆனால் கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு அடுத்த இடத்தில்தான் நாம் தமிழர் இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தை 'திராவிடர் இயக்கம்' திராவிட கட்சிகள்தான் சீரழித்துவிட்டதாகவும் கூறிவருகிறார்.
மேலும் தந்தை பெரியார் உள்ளிட்ட தமிழர் நலனுக்காக போராடிய தலைவர்கள் பலரையும் வந்தேறிகள், தெலுங்கர்கள் என முத்திரை குத்தி வருகின்றனர் சீமானும் நாம் தமிழர் கட்சியினரும்.
இதுநாள் வரை சீமானின் இழிவான விமர்சனங்களுக்கு பெரியார் இயக்கங்கள் அமைதியாக மவுனம் காத்து வந்தன. ஏனெனில் சீமானை வளர்த்துவிட்டதே இந்த பெரியார் இயக்கங்கள்தான்.
இருப்பினும் சீமானின் விமர்சனம் எல்லை மீறியதால் கடும் கோபமடைந்த பெரியார் இயக்க தொண்டர்கள் அவர் போட்டியிடும் கடலூரில் மன்னிப்பு கேட்கக் கோரி பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
கோவை கு. ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் இயக்கத் தொண்டர்கள் இப்போராட்டத்தை நடத்தினர். தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் சீமானே! மன்னிப்பு கேள்! சிங்களவருக்கு ஆதரவாக பேசி வரும் சீமானே மன்னிப்பு கேள்!! என முழக்கங்களுடன் இந்த போராட்டம் நடைபெற்றது. சீமான் மன்னிப்பு கேட்கவில்லையெனில் தங்களது போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய த.பெ.தி.க. நிர்வாகிகள், 2001-ல் பெரியார் தொண்டர்களுடன் பழகும் போது ஒரு டிரங்கு பெட்டியும் அதில் 4 பேண்ட் சட்டையும் வைத்திருந்த சீமானுக்கு இப்போது ரூ80 லட்சம் மதிப்பிலான கார் எப்படி வந்தது என்பதை விளக்குவாரா? தம்பி என்கிற ஒரு திரைப்படம் மட்டும்தானே ஓரளவு ஓடியது? ஊழலைப் பற்றி பேசுகிற தகுதி சீமானுக்கு இருக்கிறதா? இதுநாள் வரை சீமானுக்கு எதிர்வினை காட்டாமல் இருந்துவிட்டோம்.. இனியும் சீமான், தந்தை பெரியாரையும் திராவிடர் இயக்க சித்தாந்தத்தையும் இழிவாக பேசினால் கடுமையானவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தனர்.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை!












Click it and Unblock the Notifications