அலங்காநல்லூரில் நள்ளிரவை தாண்டியும் நீடிக்கும் இளைஞர்களின் போராட்டம்- கைகோர்த்த கிராம பெண்கள்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் கண்ணுறங்காமல் இளைஞர்கள் கூட்டம் நள்ளிரவை தாண்டியும் போராடி வருகின்றனர். அவர்களுடன் ஏராளமான கிராம பெண்களும் கை கோர்த்து போராட்டத்தை தொடருகின்றன
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நள்ளிரவைத் தாண்டியும் இளைஞர்கள், பெண்கள் கண்ணுறங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் கிராம பெண்களும் இணைந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை போர்க்களமாக உருவெடுக்க வைத்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் திங்கள்கிழமையன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இருந்தபோதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கியாக வேண்டும் என்பதற்கான போர்க்களமாக திங்கள்கிழமை முதல் அலங்காநல்லூர் உருவெடுத்துள்ளது. அலங்காநல்லூர் கிராமமானது திங்கள்கிழமை காலை முதலே பேரணிகள், போலீஸ் தடியடிகள், கைதுகள் என போர்க்கோலம் பூண்டிருந்தது.
இதில் உச்சகட்டமாக காலை முதல் நள்ளிரவை தாண்டியும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதிவழி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு கிராம மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
காலை முதல் இரவு வரை உணவும் குடிநீரும் இல்லாது வாடிவாசல் அருகே அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இளைஞர் படை. இரவில் கிராம மக்களே உணவு சமைத்து கொடுத்தனர். அந்த இளைஞர் கூட்டத்துடன் இணைந்தவர்களாக கிராம மக்களும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரவை கழித்தனர்.
இளைஞர்கள், பெண்களின் அமைதிவழிப் போராட்டத்தை தடுக்க முடியாத போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications