தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சேலத்தில் போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சேலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
சேலம்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சேலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீஸார் மடத்துக்குளம் அருகே தடுத்துநிறுத்தினர்.
கல்வீசி தாக்குதல்
அப்படியும் போலீஸாரை மீறி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
கண்ணீர் புகை குண்டும்
இதையடுத்து போலீஸார் ஓட்டம் பிடித்தனர். பின்னர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர்.
3 பேர் பலி
இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 3 பேர் பலியாகிவிட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பேச்சுவார்த்தை
இந்நிலையில் சேலத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்குமாறு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்படியும் பணியாததால் அவர்களை குண்டுகட்டாக வேனில் ஏற்ற போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.