வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல்... மீண்டும் நெடுவாசலில் தொடங்கியது போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறியது. இதனால் நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தொடங்கியது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் நெடுவாசல் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆலோசனை
இதனைதொடர்ந்து, நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள 70 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 8ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
மீண்டும் போராட்டம்
இந்தக் கூட்டத்தில் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெடுவாசலில் நேற்று காலை இளைஞர்களும், பெண்களும் போராட்டக்களத்தில் குவிந்தனர்.
இதையறிந்து சென்ற போலீசார், அவர்களை அங்கிருந்து விரட்டினர்.
போலீசார் பதற்றம்
காவல் துறையினரின் அனுமதியை மீறி ஏராளமான பெண்களும், இளைஞர்களும் நெடுவாசலில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர்.
எதிர்ப்பு பதாகை
அதன்பின் மாலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறும் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் மீண்டும் திரண்டு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
விவசாயிகள் போராட்டம்
இதே போன்று ஆலங்குடி அருகே கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இதனைதொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாலை 4 மணிவரை போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.