20 தமிழர் படுகொலை: தமிழகத்தில் 2வது நாளாக போராட்டம் நீடிப்பு! முற்றுகையில் ஆந்திரா நிறுவனங்கள்!!
சென்னை: 20 தமிழர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்த ஆந்திராவைக் கண்டித்து தமிழகத்தில் 2வது நாளாக போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இதேபோல் புதுச்சேரியிலும் ஆந்திராவைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுப் படுகொலை செய்தது. ஆனால் 20 பேரையும் கைது செய்து சித்ரவதைகளுக்குப் பின்னரே சுட்டுப் படுகொலை செய்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஆந்திரா போலீசாரின் இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழகம் எங்கும் நேற்று முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆந்திரா பவனை முற்றுகையிட்டனர்.
நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான அலுவலகம், கடலூரில் ஆந்திரா வங்கி ஆகியவற்றை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு இழுத்து மூடினர். மேலும் சென்னை கோயம்பேடு, பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழக முன்னேற்றக் கழகத்தினர் ஆந்திரா பேருந்துகளை அடித்து நொறுக்கினர்.
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் 2வது நாளாக தமிழகம் முழுவதும் ஆந்திராவின் அட்டூழியப் படுகொலையைக் கண்டித்து போராட்டங்கள், மறியல்களை பல்வேறு கட்சி மற்றும் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆந்திரா கலாசார மையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு, மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் குளித்தலையில் வழக்கறிஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர்.

வேலூர் மாவட்டம் வாலஜாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் ஈரோட்டில் திராவிடர் விடுதலை கழகத்தினரும் ஆந்திராவைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஆந்திரா வங்கிக்கு பூட்டு
சென்னை திருமுல்லைவாயலில் ஆந்திரா வங்கியை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடுதலை கழகத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு தனிநாடாகும்..
இதேபோல் ராசிபுரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க, தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள், ஆந்திரா மீது இந்தியாவே! நடவடிக்கை எடு! இல்லையேல் தமிழ்நாடு தனிநாடாகும் என்ற பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கிளர்ச்சி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆந்திராவுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை தந்தை பெரியார் தி.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கிராமப்புற சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவப் படம் எரிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆந்திராவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்..
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் இன்று பிற்பகல் போராட்டத்தில் குதித்தனர். உயர்நீதிமன்றம் அருகே ஒன்று திரண்ட வழக்கறிஞர்கள் ஆந்திராவின் தமிழர் படுகொலையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியை தீ வைத்து எரித்தனர்.

சேலத்தில்...
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆந்திராவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் தலைவர் பூமொழி இப்போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.

சென்னை திருப்பதி தேவஸ்தானம்...
சென்னை தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தியாகராயர் நகர் வெங்கட்நாரயணா சாலையில் உள்ள இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
மேலும் தமிழர்களை படுகொலை செய்ய உத்தரவிட்ட அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியையும் எரித்தனர்.
இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ஆந்திராவில் 20 தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாடத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications