மருத்துவ மேற்படிப்பில் 50% நிலைக்க அவசரச் சட்டமே தீர்வு.. அதுவரை போராட்டம் தொடரும்.. மாணவர்கள் உறுதி
மருத்துவ மேற்படிப்பில் 50 சதவித இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர அவசரச் சட்டமே தீர்வு என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
50 சதவீத இடஒதுக்கீடு கோரி 15 நாட்களாக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவர்களை சோர்வடையச் செய்துள்ளது. தீர்ப்பு குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ரவீந்திரநாத் கூறியதாவது:
இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்ப்புக் கிடைக்காது. எனவே, தொடக்கத்தில் இருந்தே அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் கோரி வருகிறோம். பின்னர், அந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் வைத்து நிரந்தர சட்டமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அது நிலையாக இருக்கும்.

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லிய நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் அதனை பின்பற்றுகிறது. இந்நிலையில், கீழ் நீதிமன்றத்தில் மேலும் மேலும் முறையீடு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, தமிழக அரசு சுதாரித்துக் கொண்டு மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டத்தைக் கொண்டு நடவடிக்கை எடுக்க வர வேண்டும். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதனைச் செய்ய வேண்டும்.
அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும். தமிழகம் முழுவதும் இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து மருத்துவர்கள் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்ட வேண்டும் என்று ரவீந்திரநாத் கூறினார்.
இதனால் 15 நாட்களாக பல கட்டங்களாக போராடி வந்த மருத்துவ மாணவர்களின் போராட்டம் இன்றோடு முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துக்களால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications