ஆர்.கே. நகர் சர்வே: புதிய தலைமுறையை அரசு கேபிளில் கட் செய்து புத்தியைக் காட்டிய தினகரன் குரூப்!
டிடிவி தினகரனுக்கு எதிராக கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக கூறி புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு எதிராக கருத்துக்கணிப்பு வெளியிட்டதால் வியாழக்கிழமை இரவு பல மாவட்டங்களில் அரசு கேபிளில் புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பு சில மணிநேரங்கள் நிறுத்தப்பட்டது.
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி புதிய தலைமுறை டிவி சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
ஆர்.கே.நகர் மக்களின் நாடித் துடிப்பு என்ற தலைப்பில், புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது.

அரசியல் வாரிசு
ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் என, 45.32% பேர் கூறினர். தீபா என 17.35% பேர் கருத்து கூறியுள்ளனர். சசிகலா என, 4.72%பேரும் பிறர் என, 6.99% பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

தினகரன் அணிக்கு எதிரான சர்வே
கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவாகவும் தினகரன் அணிக்கு எதிராகவே அமைந்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த டிடிவி தினகரன் அணியினர், கருத்து கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளிவருவதை தடுக்க முயற்சி எடுத்தது.

புதிய தலைமுறை ஒளிபரப்பு நிறுத்தம்
அரசு கேபிளில் புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது. வியாழக்கிழமை இரவு முதல் திருவண்ணாமலை, மதுரை, நாகர்கோவில், காஞ்சிபுரம், விருதுநகர், விழுப்புரம் என 15 மாவட்டங்களில், அரசு கேபிளில் புதிய தலைமுறை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

அரசு கேபிள் டிவிக்கு கடிதம்
அரசு கேபிள்களில் புதிய தலைமுறை சேனல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தை காக்க அனைத்து மாவட்டங்களிலும் அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி புதிய தலைமுறை தலைமை நிர்வாக அதிகாரி ஷியாம்குமார் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனர் குமரகுருபரனுக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications