பிளஸ் 2, 10ம் வகுப்பு வினா விடை புத்தகங்கள் விற்பனைக்கு – பெற்றோர் ஆசிரியர் கழகம் அறிவிப்பு!
சென்னை: சென்னையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பிலான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா-விடை தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா வங்கி, மாதிரி வினா, விடை புத்தகங்களை ஆண்டுதோறும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் விற்பனை செய்ய உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூபாய் 25 முதல் ரூபாய் 95 வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்கள் கொண்ட ஒரு தொகுப்பின் விலை ஆங்கில வழி ரூபாய் 200, தமிழ் வழி ரூபாய் 205 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 10 ஆம் தேதி முதல் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வாரியான விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ அரசு மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, புரசைவாக்கம் ஈ.எல்.எம் பேப்ரிசியஸ் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications