'அமுதம்' கடைகளில் அநியாய விலைக்கு பொருட்கள் விற்பனை... மக்கள் குமுறல்!
சென்னை: அமுதம், கூட்டுறவு அங்காடிகளில், மளிகை பொருட்கள் நிர்ணயிக்கப் பட்டதை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப் படுவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள் மூலம், பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. 'அமுதம்' என்ற பெயரில் சென்னையில் 20 கடைகளும், கடலுாரில் மூன்று கடைகளும் என 23 கூட்டுறவு மொத்த பண்டக சாலைகளுக்கு மொத்தம் 115 பல்பொருள் அங்காடிகள் இயங்கி வருகின்றன.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளிச்சந்தைகளில் விற்கப்படுவதை விட இங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மலிவு விலையில் விற்கப் படுகின்றன.
சமீபத்தில் பருப்பு விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்த போது கூட, இந்த அங்காடிகளின் மூலம் மலிவு விலையில் அரசு இறக்குமதி செய்த பருப்பு வகைகளை விற்பனை செய்தது.
இந்நிலையில், வெளிச் சந்தையை விட அதிக விலைக்கு இந்த அங்காடிகளில் மளிகைப் பொருட்கள் விற்கப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் நிறுவனங்களிடம் தனிப்பட்ட முறையில் கமிஷன் பெற்று, அமுதம், கூட்டுறவு அங்காடி அதிகாரிகள் வெளிச் சந்தையைப் போலவே எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்களை விற்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதேபோல், காலாவதி தேதி முடிய, குறைந்த அவகாசம் உள்ள தரமற்ற பொருட்களும் அங்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications