அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது அதுகுறித்த அச்சம் வேண்டாம் : ஜிதேந்தர் சிங்
டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள அணு உலைகள் அனைத்தும் முழு அளவில் பாதுகாப்பாக இருப்பதாக அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
'கதிர்வீச்சு பாதுகாப்பு குறித்து மக்களுக்கு கல்வி அளித்தல்' தொடர்பான கருத்தரங்கம் தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜிதேந்தர் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அணு உலைகள் குறித்து அச்சப்பட வேண்டாம். அணு உலைகள் அனைத்திலும் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதாகக் கூறினார்.
மேலும், நாட்டின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய அணு உலைகள் தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். எனவே, அணு உலைகளின் பயன்கள் குறித்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.
சில நேரங்களில் புதிய அணு உலைகள் அமைக்கும் போது, அந்த பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக பணிகள் முடங்கிவிடுகிறது. அணுசக்தித் துறையினர் காவல்துறையினர் மற்றும் சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் இந்த எதிர்ப்புகள் சரிசெய்யப்பட்டு வருகிறது.
அறிவியல் சார் குழுக்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அணு ஆற்றல் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.