சேலத்தில் செயற்கை முட்டையா ? பொது மக்கள் பீதி
சேலம்: சேலம் மாவட்டத்தில் செயற்கை முட்டைகள் விற்பனைக்கு வந்திருப்பதாக பரவிய வதந்தியால் பொது மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முட்டை கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை, தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில், செயற்கை முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடையே வதந்தி பரவியது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வாங்கி வைத்திருந்த முட்டைகளை சாலையில் போட்டு உடைத்தனர். பின்னர் முட்டையின் உள்புறம் உள்ள அடுக்கில் பாலிதீன் பொருள் போன்ற படிமம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்தப் பகுதிகளில் உள்ள முட்டை கிடங்குகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் சிலவற்றை உடைத்தும், மேலும் சில முட்டைகளை வேக வைத்தும் சோதனை செய்தனர்.
இந்த ஆய்வில் முட்டையின் ஓடு மற்றும் வெள்ளை கருவுக்கு இடையே இயல்பாகவே பாலிதீன் போன்ற அமைப்பு உள்ளது என்றும், செயற்கையான முட்டைகள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்தே மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த வதந்தி அங்கம் பக்கத்தில் பரவியதால் பொது மக்கள் பீதியடைந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கிளம்பிய வதந்தியால் ஒரு கிலோ உப்பு ரூ400 வரை விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications