கோவளம் துறைமுக திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டத்தால் பதட்டம்-போலீஸ் குவிப்பு
கோவளம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருவதால் பதட்டம் நிலவுகிறது.
கன்னியாகுமரி: கோவளம் கடற்கரை பகுதியில் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராடி வருவதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி கோவளம்-கீழமணக்குடி அருகே மத்திய அரசு சார்பில் பன்னாட்டு சரக்கு பெட்டக முனையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரக்கு பெட்டக மாற்று முனையம் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடல் பகுதியில் மீனவர்களும், பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலையை முற்றுகையிடலாம் என் வதந்தி பரவியது.
இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி கூறுகையில், கடல் முற்றுகை போராட்டத்தில் 40 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். சரக்கு பெட்டக முனையம் நிறுவினால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஏராளமானோர் நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்; சுற்று சூழல் மாசு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications