அரக்கோணம் அருகே குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர்: தொடர் மழை காரணமாக அரக்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஏராளமான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இவ்வாறு மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வேலூரை அடுத்துள்ள அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம் ஊராட்சிக்குபட்ட பாப்பான்குளம், லட்சுமி நகர், உமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி காணப்படுகிறது. அதனை வெளியேற்றுவதற்காக வடமாம்பாக்கம் ஏரியை திறந்து விடக்கோரி அப்பகுதி மக்ககள் வருவாய் துறை அதிகாரிகளிடமும், ஊராட்சிமன்றத் தலைவரிடமும் முறையிட்டனர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து பொதுமக்கள் நேற்று அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரிசையாக தேங்கி நின்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.ஆர்.அருள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications