விருதுநகர் அருகே சாலைவிபத்தில் தம்பதி பலி.. கொதித்தெழுந்த கிராம மக்கள் திடீர் மறியல்!
சாலைவிபத்தினை தடுக்க பேரிக்கார்டு அமைக்க கோரி மறியல் நடைபெற்றது.
Recommended Video
விருதுநகர்: விருதுநகர் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்தினை தடுக்க சாலைகளில் பேரிகார்டு அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னிசேரிபதூரை சேர்ந்தவர் சவரிராஜ், 55. இவரது மனைவி ராணி 50, இவர்கள் இருவரும் இன்று காலை பட்டம்புதூர் அருகே மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிரே வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தம்பதி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பட்டம்புதூர் மக்கள், மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அப்பகுதியில் பேரிகார்டு அமைக்க வேண்டும் என்று கோரி ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்களின் இந்த மறியலால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தகவலறிந்து வந்த போலீசார் கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.