புத்தகத் திருவிழா நேரத்தில் மரணமடைந்த பிரபல பதிப்பாளர் வானதி திருநாவுக்கரசு!
தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார்.
அவருக்கு வயது 88. சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். பழம்பெரும் புத்தக வெளியீட்டாளரான வானதி திருநாவுக்கரசு, புத்தகச் சந்தை துவங்கியுள்ள இந்த நேரத்தில் இயற்கை எய்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலால் ஈர்க்கப்பட்டு, அதில் வரும் வானதி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் பதிப்பகம் தொடங்கி, ஏராளமான சரித்திர, சமூக நாவல்களை வெளியிட்டார்.
குறிப்பாக கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள் அனைத்தையும் வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு.
வானதி திருநாவுக்கரசின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.30க்கு சென்னை திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு மாட வீதி, நகரத்தார் விடுதியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
தகவலுக்கு: டி.ஆர். ராமநாதன், 98848 09246 / 044-24996344