டிடிவி தினகரனுக்கு பெருகும் ஆதரவு.. புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஹசன்னா, அன்பழகன் ஆகியோர் டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரனை அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் இன்று மாலை புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஹசன்னா, அன்பழகன் மற்றும் தென்காசி எம்எல்ஏ செல்வமோகன் தாஸ் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனுக்கு, எம்எல்ஏ-க்களின் ஆதரவு பெருகி வருகிறது. சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு வரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தென்காசி எம்எல்ஏ செல்வமோகன் தாஸ் டிடிவி தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன்மூலம் தினகரன் அணி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் வரஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஹசன்னா மற்றும் அன்பழகன் ஆகியோர் டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.