புதுச்சேரி சிறுமிகள் பலாத்கார வழக்கு... தலைமறைவான 6 போலீசாரில் ஒரு ஏட்டு சரண்
புதுவை: புதுச்சேரியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 6 போலீசாரில் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
கடந்தாண்டு ஏப்ரலில் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விபச்சாரக் கும்பலிடமிருந்து சிறுமிகள் சிலர் மீட்கப்பட்டனர். விசாரணையில் அச்சிறுமிகளைப் புதுச்சேரி போலீசாரும் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறுமிகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, தலைமைக் காவலர்கள் குமரவேல், பண்டரிநாதன், காவலர்கள் சங்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மீது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமை தவிர்த்து இதர 8 போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. எஸ்பி வெங்கடசாமி தலைமையிலான தனிப்படையினர் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.
இதற்கிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கடந்த சனிக்கிழமை சரணடைந்தனர். அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 6 போலீசாரின் புகைப்படங்களையும் வெளியிட்ட சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. வெங்கடசாமி, அவர்களை தலைமறைவு குற்றவாளிகள் என அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஏட்டு பண்டரிநாதன் நேற்று சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் தலைமை நீதிபதி வேல்முருகன் முன்னிலை ஆஜர்படுத்தினார்கள். பின்னர் பண்டரிநாதன் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications