காவிரி விவகாரம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
சென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவரை சென்னையில் சந்தித்தார். அப்போது காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

மத்திய அரசுக்கு எதிராக இன்று அதிமுக சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்புகளின் சார்பில், இன்று மாபெரும் கடையடைப்பு போராட்டம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக்கண்டித்து, திமுக சார்பில் ஏப்ரல் 5ம் தேதி முழு வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications