திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுவை போலீஸ்காரர் விபத்தில் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்
புதுச்சேரி: சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த புதுவை மாநில போலீஸ்காரரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
புதுவை நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் பூந்தோட்ட வீதியைச் சேர்ந்தவர் ராஜா(26). புதுவையில் பயிற்சி காவலராக இருந்தார். கடந்த 13ம் தேதி அவர் பைக்கில் கோரிமேடு டோல்கேட் அருகே செல்கையில் பின்னால் வந்த வேன் அவரது வாகனத்தில் மோதியது. இதில் ராஜா படுகாயம் அடைந்தார்.
புதுவை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை தேறவில்லை. இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து ராஜாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் பல உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உறுப்புகள் பலருக்கு பொருத்தப்பட்டன.
ராஜா தேசிய கால்பந்து வீரராக இருந்தவர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications