சம்பள பாக்கியை தராத புதுவை அரசு... போக்குவரத்து ஊழியர்கள் தொடர் ஸ்டிரைக்... பயணிகள் அவதியோ அவதி!
சம்பள பாக்கியை கண்டித்து புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரிகள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி : புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊதிய பாக்கியை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உடனடியாக ஊதியத்தை வழங்க வலியுறுத்தி 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை இதனால் புதுச்சேரி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊழியர்களின் கோரிக்கைக்கு அரசும் செவி சாய்த்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் ஊழியர்களின் போராட்டம் நீடிக்கிறது.
முன்பதிவு பேருந்துகளும் இல்லை
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன தாழ்தள பேருந்துகள் உட்பட அதிகளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாரத்தின் தொடக்க நாளான இன்று புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வர பேருந்துகளை முன்பதிவு செய்தவர்கள் அதிகாலை பேருந்து நிலையம் வந்து பார்த்த போது பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அலுவலகத்தில் வாக்குவாதம்
சென்னையில் பணிபுரியும் பெண்கள் பணிக்கு செல்வதற்காக பேருந்து ஏற வந்த போது பேருந்து நிலையம் வெறிச்சோடி இருந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் முன்பதிவு மைய அலுவலகத்தில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டது.
தமிழக பஸ்களில் கூட்டம்
புதுச்சேரி அரசு பேருந்துக்குப் பதிலாக தமிழக அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்து தரப்பட்டது. எனினும் கடைசி நேர ஏற்பாட்டால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி நகரிலும் மக்கள் அவதி
புதுச்சேரியிலும் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் அதிகளவு இயக்கப்படும் நகரப்பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள், வேலைக்குசெல்வோர் அவதிக்கு ஆளாகினர். ஜிப்மர் உள்ளிட்ட 7 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகளும் மிகுந்த பாதிப்புக்கு ஆளானார்கள்.