புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு திடீர் வயிற்று வலி...
ரங்கசாமி புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவுக்காக நேற்று காரைக்கால் மாவட்டம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு திடீரென லேசான வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் ரங்கசாமி கடற்கரை சாலையில் உள்ள பொதுப்பணி துறை விடுதியில் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு சுகாதார துறை இயக்குனர் ராமன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். இதனால் பிற விழாக்களை மற்ற அமைச்சர்களை தொடர்ந்து நடத்துமாறு கூறிவிட்டு பொதுப்பணித்துறை விடுதியிலேயே ரங்கசாமி ஓய்வு எடுத்தார்.
பின்னர் நேற்று இரவு 9.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு புதுவை வந்தார். நள்ளிரவில் புதுவைக்கு வந்தடைந்த ரங்கசாமி லாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து இன்று காலை முதல் அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வதாகவும், அவரது உடல் நிலை சீரடைந்துள்ளதாகவும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.