சொல்லிக் கொடுக்க வாத்தியார் இல்லை - புளியங்குடி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புளியங்குடி: புளியங்குடி மனோ கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடத்தை நிரப்பு கோரியும், உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற கோரியும் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி டிஎன் புதுக்குடியில் தனியார் கட்டிடததில் சுமார் 10 ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் கீழ் மனோ கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய இளங்கலை பட்டப்படிப்புகளும், கணிதம் முதுநிலை பட்டப்படிப்பும் உள்ளன. இந்த கல்லூரியில் சுறறு வட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இருப்பினும் ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடங்களுக்கு விரிவுரையாளர் இல்லாததால் மாணவ, மாணவிகள் திண்டாடி வருகின்றனர். இதே போல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை உடனடியாக திரும்ப பெற கோரியும், கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கும் தீர்வு கிடைக்காவிட்டால் வரும் 16ம் தேதி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications