விருதுநகரில் 6 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் – புதிய தமிழகம் அறிவிப்பு
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதியன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘'விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலால் இதுரை 23 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இன்னும் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்புரவு பணிகளை சரிவர செய்யாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால் வந்த ஆபத்து தான் இது.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகிறது. இந்த கால கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் ஒரு இலக்கு நிர்ணயம் செய்து சுகாதார பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த ரூபாய் 165 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்தது. அந்த நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதை உடனடியாக ஒதுக்கி இந்த சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த வலியுறுத்தி வருகிற 6 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் புதிய தமிழகம் கட்சி சார்பில் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் நடத்தப்படும்''என்று கூறினார்.












Click it and Unblock the Notifications