பத்திரிக்கையாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ.,வை புழல் சிறையில் சந்திக்க விஜயகாந்த்துக்கு அனுமதி மறுப்பு!!
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதியை சந்திக்கச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் விஜயகாந்த் வீட்டின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிக்கையாளர்களை தாக்கியதாக விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை சந்திக்க அனுமதி கேட்டு விஜயகாந்த்த் நேற்று மனு அளித்தார். அனுமதிக்காக விஜயகாந்த்துடன் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னேரி சி.எச்.சேகர்,ஆரணி பாபு முருகவேல், திருச்சங்கோடு சம்பத் ஆகியோர் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து விஜயகாந்த்துடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.