புழல் எரி வேகமாக நிரம்பி வருவதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
செங்குன்றம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமான புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க கரையில் நின்றபடி ஏரியை வேடிக்கை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இந்த ஏரியில் நீர்வரத்து குறைந்து 13 ஆண்டுகளுக்குப்பிறகு முற்றிலும் காய்ந்து விடும் நிலை ஏற்பட்டது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, புழல் ஏரியில் தற்போது 2,129 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரிக்கு வெள்ளனூர், பொத்தூர், ஆரிக்கம்பேடு, திருமுல்லைவாயல், எர்ராங்குப்பம், பம்மதுகுளம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்தும், லட்சுமிபுரம் ஏரி நிறைந்து அதன் உபரி நீரும் வந்து கொண்டு இருக்கிறது.
அதேபோல சோழவரம் ஏரியிலும் தண்ணீர் உயர்ந்து வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி ஆகும். தற்போது ஏரியில் 692 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. எரி நிரம்பும் தருவாயில் இருப்பதால் பாதுகாப்பு கருதி சோழவரம் ஏரியில் இருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீரும் புழல் ஏரியில் சென்று கலைகிறது.இவை அனைத்தையும் சேர்த்து மொத்தம் வினாடிக்கு 2,286 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் புழல் ஏரி முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியை விரைவில் எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புழல் ஏரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெடுங்காலமாக நீர் வரத்து இன்றி காய்ந்து கிடந்த புழல் ஏரி தற்போது கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை காண ஏராளமான மக்கள் புழல் ஏரிக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏரிக்கரையில் நின்றபடி ஏரியை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒருவேளை புழல் ஏரி நிரம்பி விட்டால் அதன் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படும். அது செங்குன்றம், சாமியார் மடம், வடகரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், சடையன் குப்பம் வழியாக எண்ணூர் கடலை சென்றடையும். இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மாதவரம், உடையார் தோட்டம், தணிகாசல நகர், பிரகாஷ் நகர், ஆசிரியர் காலனி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், புழல் ஏரியில் நீர் திறந்து விடப்பட்டால் இந்தப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications