பூண்டி ஏரியில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: சென்னையை அடுத்த பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அதற்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்படுகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரைகள் உடைந்து அதனைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
மணலி புதுநகரில் வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித்தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு காரனோடை, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றின் கரை உடைந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் அதனை உடனடியாக சீரமைக்கும்படி பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். ஆரணியாறு, கொசஸ்தலை ஆறுகளில் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று முதல் குறையும்:
ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியதால் அதில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகின்ற நிலையில் இன்று முதல் அது 956 கன அடியாக குறைக்கப்பட உள்ளது. இதனால் கொசஸ்தல ஆற்றின் கரையோர மக்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்












Click it and Unblock the Notifications